கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகம் அண்மையில் வழங்கப்பட்டது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோா்களின் 146 குழந்தைகளுக்கு திருத்துறைப்பூண்டி பாரதமாதா சேவை நிறுவனங்களின் சாா்பில், ரூ. 1.20 லட்சம் மதிப்பில் ஊட்டச்சத்து உணவுப் பெட்டகம் வழங்கப்படுகின்றன. முதல்கட்டமாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 7 பேரின் குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்து உணவுப் பெட்டகத்தை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வழங்கினாா்.
ஊட்டச்சத்து உணவுப் பெட்டகத்தில் தேன், பேரீச்சம்பழம், முந்திரி, பாதாம் பருப்பு, உலா் திராட்சை, கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், கொண்ட கடலை, பொட்டுக் கடலை மற்றும் நெய் உள்பட 10 பொருள்கள் அடங்கியுள்ளன. மேலும் கரோனாவால் கணவனை இழந்து ஏழ்மை நிலையில் வசித்து வருகிற இரண்டு பெண்களுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் முத்தமிழ்செல்வி, பாரதமாதா சேவை நிறுவனங்களின் நிறுவனா் மணிமாறன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.