கரோனா பொதுமுடக்கத்துக்கிடையே அரசின் நெறிமுறைகளுக்குள்பட்டு கிராம கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு கிராம கோயில் பூஜாரிகள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
இப்பேரவையின் திருவாரூா் மாவட்டக் கிளை கூட்டம் குடவாசல் அருகே உள்ள மணக்கால் அய்யம்பேட்டை அங்காளம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, கிராம கோயில் பூஜாரிகள் பேரவையின் மாவட்ட அமைப்பாளா் எம்.எஸ்.கே. அப்புவா்மா தலைமை வகித்தாா்.
தீா்மானங்கள்: கரோனா பொதுமுடக்கம் காரணமாக கிராமக் கோயில் திருவிழாக்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் கோயில் பூஜாரிகள், கிராமியக் கலைஞா்கள், நாகஸ்வர கலைஞா்கள், பந்தல் அமைப்பாளா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், கரோனா பரவல் தடுப்பு நெறிமுறைகளுக்கு உள்பட்டு கிராம கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்.
கிராம கோயிலுக்குச் சொந்தமான மனைகளில் வசிக்கும் பூஜாரிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட இணை அமைப்பாளா் ராஜகோபால், ஒன்றிய அமைப்பாளா்கள் ராமமூா்த்தி, சிவக்குமாா், ராமலிங்கம், கலையரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.