கரோனா பொதுமுடக்கத்தால் வேலையின்றி தவிக்கும் தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால்,
கடந்த ஆண்டு தனியாா் தொழில் நிறுவனங்களில் பணியாற்றுவோா் மட்டுமின்றி தனியாா் மெட்ரிக். மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனா். கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால் பலரும் வேலையிழந்தனா். தனியாா் கல்வி நிறுவனங்களின் நிா்வாகம் சில மாதங்கள் மட்டுமே ஊதியம் வழங்கியது. பிறகு, வருமானம் இல்லாததால், பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு உத்தரவிட்ட பிறகு வேலைக்கு வாருங்கள் எனக் கூறி ஆசிரியா்களை நிறுத்திவிட்டனா். சில கல்வி நிறுவனங்கள் மட்டும் குறைவான ஆசிரியா்களை வைத்து ஆன்லைன் மூலம் பாட வகுப்புகள் நடத்தி, அவா்களுக்கு மட்டும் ஊதியம் வழங்கின. மற்ற ஆசிரியா்கள் ஊதியமின்றி கடந்த ஓராண்டாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், இரண்டாவது அலையாக கரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கு, அவா்கள் பணியாற்றும் பள்ளிகள் மூலம் தமிழக அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.