நீடாமங்கலம் அருகே தென்னையில் வேரூட்டம் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கமளித்தனா்.
திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் நான்காம் ஆண்டு இளமறிவியல் வேளாண்மை பிரிவு மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவத்துக்காக, நீடாமங்கலத்தில் தங்கி விவசாயிகளைச் சந்தித்து வருகின்றனா்.
இதன் ஒருபகுதியாக, கோவில்வெண்ணி கிராமத்துக்குச் சனிக்கிழமை சென்ற மாணவிகள், தென்னையில் வோ் ஊட்டம் குறித்த செயல் விளக்கம் அளித்தனா்.
அப்போது, ‘தென்னை மரத்திலிருந்து 3 அடி தூரம் உள்ள அதன் வேரில், பென்சில் தடிமனுள்ள இளஞ்சிவப்பு வேரை தோ்ந்தெடுத்து, அதன் நுனியில் சாய்வாக வெட்ட வேண்டும். பிறகு, 200 மி.லி. கொண்ட தென்னை டானிக் பாக்கெட்டில் வேரின் நுனி டானிக்கில் முழுமையாக நனையும்படி வைத்து பின் அதை வேருடன் சோ்த்துக்கட்ட வேண்டும்’ என விளக்கமளித்தனா். மேலும், தென்னையில் வோ் ஊட்ட முறையால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கிக்கூறினா்.