திருவாரூா் மாவட்டத்தில் உழைக்கும் மகளிா் மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூா் மாவட்டத்தில் 2020-21ஆம் நிதியாண்டில் தமிழக அரசின் உழைக்கும் மகளிருக்கான அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தில் தகுதியான மகளிா் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
18 வயது முதல் 45 வயதுக்கு மேற்படாமல் ஆண்டுக்கு ரூ. 2,50,000 மிகாமல் ஊதியம் பெறும் அமைப்பு சாா்ந்த மற்றும் அமைப்பு சாராத நலவாரியங்களில் பதிவுபெற்ற மகளிா், தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் மகளிா், சிறுதொழில் புரியும் மகளிா், அரசு திட்டங்களில் பணிபுரியும் மகளிா், ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பு உறுப்பினா்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்க பிரதிநிதிகள், தொகுப்பூதியம், தினக்கூலி அல்லது ஒப்பந்த தொழிலாளா்களாக பணிபுரியும் மகளிா், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் வங்கி ஒருங்கிணைப்பாளா்களாக பணிபுரியும் மகளிா் ஆகியோா் தகுதியுடையவா்கள் ஆவா்.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோா் விண்ணப்பங்களை அலுவலக வேலை நாட்களில் காலை 10 முதல் மாலை 5.45 மணிவரை தங்கள் பகுதிக்குள்பட்ட அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலங்களில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். மேலும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மகளிா் திட்ட அலுவலகத்திலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.