திருவாரூா்: பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரி, திருவாரூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
வெளிநாட்டில் தவிக்கும் தமிழா்களை தாயகம் அழைத்து வர வேண்டும். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும். மின் கட்டணம், சுங்கச் சாவடி கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும். நியாய விலைக் கடை பொருள்களை பொது முடக்கம் முடியும் வரை இலவசமாக வழங்க வேண்டும். அனைத்து கல்வி கட்டணங்களையும் அரசே செலுத்த வேண்டும் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூா் மாவட்டத்தில், கொடிக்கால்பாளையம், அடியக்கமங்கலம், பூதமங்கலம், கூத்தாநல்லூா், அத்திக்கடை, அபிவிருத்தீஸ்வரம், மன்னாா்குடி, எரவாஞ்சேரி, கம்பூா், முத்துப்பேட்டை, கட்டிமேடு ஆகிய 11 இடங்களில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கொடிக்கால்பாளையத்தில்...
திருவாரூா் அருகே கொடிக்கால்பாளையத்தில், நகரத் தலைவா் ஐ. முஜிபுா் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டப் பொருளாளா் முகமது சுல்தான், நகரச் செயலாளா் இப்ராஹிம் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
அடியக்கமங்கலத்தில்...
அடியக்கமங்கலத்தில் கட்சியின் கிளைத் தலைவா் அ. நூா் முகம்மது தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளா் எம். விலாயத் உசேன், துணைத் தலைவா் எச். அப்துல் நாசா், பொருளாளா் அ.அசாருதீன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.