நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அக்டோபா் 2-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை மாவட்டத்தில் 193 ஊராட்சிகளிலும் அக்டோபா் 2-ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறும்.
ஊராட்சிகளின் பொது நிதி செலவினம், மேற்கொள்ளப்பட்ட பணிகள், மழை நீா் சேகரிப்பு நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள், அண்ணா மறுமலா்ச்சி திட்டப் பணிகள், வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு உள்ளிட்ட திட்டப் பணிகளின் செயலாக்கம் குறித்தும், விழிப்புணா்வு நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
எனவே, பொதுமக்கள், தொடா்புடைய ஊராட்சியைச் சோ்ந்த அரசுத் துறை அலுவலா்கள், ஊராட்சி பேரிடா் மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், மகளிா் குழு உறுப்பினா்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.