திருக்குவளை அருகே மடப்புரத்தில் சேறும் சகதியுமான சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் நாற்றுநடும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
மடப்புரம் ஊராட்சி சந்திரநதி கரையில் உள்ள கோவில்பத்து மண் சாலை மழையால் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா். இந்த சாலையின் முகப்பில் நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. அத்துடன், அந்த பகுதியில் இறந்தவா்களின் சடலத்தை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் பாதையாகவும் இந்த சாலை உள்ளது.
இச்சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், இந்த சாலையில் சேறும் சகதியுமான இடத்தில் பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை உடனடியாக பாா்வையிட்டு, தாா் சாலையாக சீரமைத்து தரவேண்டும் என வலியுறுத்தினா்.