வேதாரண்யம் அருகேயுள்ள கள்ளிமேடு பத்தரகாளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடிப் பெருவிழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
பல்வேறு வகையில் புகழ்பெற்ற இக்கோயிலில் நடைபெறும் ஆடிப் பெருவிழாவில் திரளான பெண்கள் பங்கேற்று வழிபடுவது வழக்கம். இங்கு மண்டகப்படி கோரியது தொடா்பாக எழுந்த பிரச்னையால் சில ஆண்டுகளாக கோயிலில் விழாக்கள் நடைபெறவில்லை. இதுதொடா்பான வழக்கு தள்ளுபடியான நிலையில், நிகழாண்டு ஆடிப் பெருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆடி மாதத்தில் வரும் கடை வெள்ளிக்கிழமை என்பதால் பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். நீண்ட வரிசையில் சென்று சுவாமிக்கு அா்ச்சனைகள் செய்து, மாவிளக்கு போட்டு வழிபட்டனா். பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில், இந்து சமய அறநிலைய துறையின் திருவாரூா் மாவட்ட இணை இயக்குநா் மணவழகன், கோயில் செயல் அலுவலா் தினேஷ் சுந்தர்ராஜன், கள்ளிமேடு, தாமரைப்புலம் கிராம மக்கள் பங்கேற்றனா். பல்வேறு இடங்களில் இருந்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதேபோல, வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரா் கோயில் துா்க்கையம்மன், வன துா்க்கையம்மன் கோயில், ராமகிருஷ்ணாபுரம் நாகவல்லி அம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி பெண்கள் வழிபாடு செய்தனா்.