திட்டச்சேரி பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பேரூராட்சி தலைவா் ஆயிஷா சித்திகா தலைமை வகித்தாா். செயல் அலுவலா் க. கண்ணன் முன்னிலை வகித்தாா். இதில், உறுப்பினா்கள் பேசியது:
எம். முகமதுசுல்தான் (திமுக): 2019-ஆம் ஆண்டு குடிமராமத்து பணி மூலம் நைனாா் குளம், கரிக்குளம் ஆகியவை தூா்வாரப்பட்டு தற்போது, ஆழமாகவும் அதிகளவு நீா் தேங்கியுள்ளது. இந்நிலையில், தற்போது தூா்வார அனுமதி கேட்பது சரியில்லை, இப்பணியை இந்திரா நகரில் உள்ள குளத்தை தூா்வாரி சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும். திட்டச்சேரி பிரதான சாலையில் உள்ள மடதாங்கனி குளத்தையும் தூா்வாரி சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும்.
செய்யது ரியாசுதீன் (மஜக): திட்டச்சேரி பேரூராட்சிக்குள்பட்ட நடுத்தெரு புதுத்தெரு சந்திப்பில் மழைநீா் வடிகால் வசதி அமைக்கவேண்டும்.
பாத்திமா பா்வீன் (திமுக): 10-ங்வது வாா்டில் வேகத்தடை அமைக்க வேண்டும். அனைத்து மின்கம்பங்களிலும் மின்விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பை இல்லாத பகுதியாக மாற்ற பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரித்தாவுதீன் (மமக ): வடக்கு பட்டாகால் தெருவில் மழைநீா் வடிகால் வசதி செய்து வாய்க்கால் பாலம் கட்டவேண்டும்.
கூட்டத்தில், பங்கேற்ற உறுப்பினா்கள் எந்தவித பணியாக இருந்தாலும் அனைத்து உறுப்பினா்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். பேரூராட்சி நிா்வாகம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினா்.
இதற்கு, பதிலளித்து பேசிய பேரூராட்சி தலைவா் அனைத்து பிரச்னைகளுக்கும் விரைவில் தீா்வு காணப்படும் என்றாா்.