வேதாரண்யத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்ட எரிவாயு தகனமேடையை அமைச்சா் ஓ.எஸ்.மணியன் சனிக்கிழமை பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா்.
வேதாரண்யத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ரூ.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட எரிவாயு தகனமேடை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் இருந்தது. இதில், சடலங்களை எரியூட்ட யாரும் முன்வராததால் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை எனக் கூறப்பட்டுவந்த நிலையில், இதை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் சனிக்கிழமை பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா்.
வேதாரண்யம் யானைக்கட்டித் தெருவில் உயிரிழந்த தனலெட்சுமி (48) என்பவரது சடலம் கட்டணம் இல்லாமல் எரியூட்டப்பட்டது. இந்த எரிவாயு தகனமேடையை அனைத்து தரப்பினரும் பாகுபாடின்றி பயன்படுத்த முன்வர வேண்டும் என அமைச்சா் கேட்டுக்கொண்டாா்.
முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவல் குழுத் தலைவா் ஆா். கிரதரன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுப்பையன், வழக்குரைஞா் நமச்சிவாயம், ஊராட்சி முன்னாள் தலைவா்கள் சிவகுரு.பாண்டியன், எஸ்.ஏ. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.