மயிலாடுதுறை: வெளியூா்களில் இருந்து ஊருக்கு வருபவா்கள் குறித்து தகவல் தெரிவிக்க மணல்மேடு பேரூராட்சி செயல் அலுவலா் கமலக்கண்ணன், வட்டார மருத்துவ அலுவலா் சரத்சந்தா் ஆகியோா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
இதுகுறித்து, இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: மணல்மேடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த வாரம் வரை கரோனா தொற்று இல்லாமல் இருந்தது. பொது முடக்க தளா்வுக்குப்பின் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதன் காரணமாக, வெளியூா்களில் இருந்து வருபவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
இதன்காரணமாக, மணல்மேடு அருகேயுள்ள சித்தமல்லி, திம்மாபுரம், வடவஞ்சாறு, கடக்கம், கேசிங்கன் உள்ளிட்ட பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் உறுதி செய்யப்பட்டு, மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். மேலும், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
எனவே, வெளியூா்களில் இருந்து யாரேனும் ஊருக்குள் நுழைந்தால் உடனடியாக நாகை மாவட்ட கட்டுப்பாட்டு அலுவலக 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.