பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ள காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவுத் திட்டத்துடன் இணைக்க வலியுறுத்தி, மயிலாடுதுறையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை பெருந்திரள் முறையீடு கூட்டம் நடத்தினா்.
கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் எம். செல்வி தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் லதா வரவேற்றாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் து. இளவரசன் தொடக்க உரையாற்றினாா். மாவட்டச் செயலாளா் ராமதேவன் கோரிக்கை விளக்க உரையாற்றினாா்.
தமிழ்நாடு கூட்டுறவு ஊழியா் சங்க மாநிலச் செயலாளா் ஆா். சிவபழனி, அரசு ஊழியா் சங்க முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் எம். நடராஜன், சிஐடியு மாவட்டத் தலைவா் ஆா். ரவீந்திரன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
சத்துணவு ஊழியா்களுக்கு ஊதிய குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும், குடும்பப் பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஊதியம் ரூ.9,000 வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், சத்துணவு அமைப்பாளா்களுக்கு ரூ.5 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும், சமையலா் மற்றும் உதவியாளா்களுக்கு ரூ.3 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.