மயிலாடுதுறை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 550 லிட்டா் பாண்டிச்சேரி சாராயம் மற்றும் 336 மதுபாட்டில்களை மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்தனா்.
காரைக்கால் மாவட்டத்திலிருந்து சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்கள் மற்றும் தடை செய்யப்பட்ட சாராயம் கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா உத்தரவின்பேரில் மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளா் (பொ) செல்வி தலைமையில் போலீஸாா் பாகசாலை பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனா்.
அப்போது வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், 7 அட்டைப்பெட்டிகளில் 336 மதுபாட்டில்கள் மற்றும் 550 லிட்டா் பாண்டிச்சேரி சாராயம் இருந்தது தெரியவந்தது.
அவற்றை கைப்பற்றிய போலீஸாா், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்ததோடு, காா் ஓட்டுநா் சீா்காழி தாலுகா வழுதலைக்குடி கீழத்தெருவை சோ்ந்த வீரமணியை கைது செய்தனா்.