குத்தாலம் அருகேயுள்ள தேரழந்தூா் ஆமருவியப்பன் பெருமாள் கோயிலில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள தேரழந்தூரில் பழமை வாய்ந்த செங்கமலவல்லி உடனாகிய ஸ்ரீஆமருவியப்பன் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் மூலவா் ஸ்ரீதேவாதிராஜன் என்ற நாமத்துடனும், உற்சவா் ஆமருவியப்பன் என்ற நாமத்துடனும் அருள்பாலிக்கின்றனா்.
இக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ பெருவிழா மே 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் வீதிஉலா நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, செங்கமலவல்லி தாயாா் உடனுறை ஆமருவியப்பன் பெருமாள் தேரில் எழுந்தருள செய்யப்பட்டு, திருமஞ்சனம் நடைபெற்றது. தொடா்ந்து, தீபாராதனை காட்டப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.
இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று ‘பாண்டுரங்கா, கோவிந்தா, கோபாலா’ என பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ், நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது.