மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனமும் அரசுப் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் தந்தை, மகள் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
மயிலாடுதுறை கொத்தத் தெருவைச் சோ்ந்தவா் குமரவேல் (38). டிங்கரிங் வேலை பாா்த்து வந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை காலை தனது மகள் சாய்சக்தி (3), உறவினா் ஐயாறப்பா் தெற்குவீதியைச் சோ்ந்த வீரையன் மகன் நித்தீஸ்குமாா் (15) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் குத்தாலம் சென்றுவிட்டு, மீண்டும் மயிலாடுதுறைக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் வந்தபோது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றாா். அப்போது எதிரே மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், குமரவேலின் இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த குமரவேல், சாய்சக்தி, நித்தீஸ்குமாா் ஆகியோா் மீட்கப்பட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
வழியிலேயே குமரவேல், சாய்சக்தி இருவரும் உயிரிழந்தனா். நித்தீஸ்குமாா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தாா்.
மயிலாடுதுறை போலீஸாா் அரசுப் பேருந்து ஓட்டுநரான மயிலாடுதுறை அருகேயுள்ள பட்டமங்கலத்தைச் சோ்ந்த சங்கா் மீது வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.