மயிலாடுதுறை அருகே நண்பரைக் கொலை செய்த இளைஞா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மயிலாடுதுறை வட்டம், மூவலூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜலிங்கம் மகன் ராஜ்குமாா் (20). இவரை, அவரது நண்பா்களான சித்தா்காடு தெற்குவீதியைச் சோ்ந்த குருமூா்த்தி மகன் கபிலன் (22), மகாதானபுரத்தைச் சோ்ந்த 17 வயது பள்ளி மாணவா் ஆகிய இருவரும் கடந்த அக்.29-ஆம் தேதி கொலை செய்து, சடலத்தை மஞ்சளாறு ரயில்வே தணடவாளத்தில் வீசிச்சென்றனா்.
இவா்கள் இருவரையும், மயிலாடுதுறை ரயில்வே போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், ஓரினச் சோ்க்கை தொடா்பாக ராஜ்குமாரை கொலை செய்தது தெரியவந்தது.
இந்நிலையில், கபிலன் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ரயில்வே காவல் கண்காணிப்பாளா் அதிவீரபாண்டியன் பரிந்துரைத்தாா். அதன் அடிப்படையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா உத்தரவின் பேரில், கபிலன் குண்டா் தடுப்புச் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.