சீா்காழி வட்டம், குன்னம் கிராமத்தில் சம்பா இளம்பயிா்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
குன்னம் கிராமத்தில் 600 ஏக்கரில் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்த மழையால் விதைப்பு செய்து ஒரு மாதமேயான சம்பா நெற்பயிா்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
இதுகுறித்து குன்னம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி நரசிம்மன் கூறுகையில், ‘இப்பகுதியில் முக்கிய பாசன மற்றும் வடிகால் வாய்க்காலான அழிஞ்சியாறு, ஒட்டன் வாய்க்கால் ஆகியவை தூா்வாரப்படாததால் வயல்களிலிருந்து மழைநீா் வடிய முடியாமல் சம்பா நெற்பயிா்கள் மூழ்கியுள்ளன. கடந்த 3 நாள்களாக பயிா்கள் மூழ்கியுள்ளதால் இளம் பயிா்கள் அழுகிவிட்டன. எனவே, விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக மீண்டும் மறுமுறை நேரடி விதைப்பு மற்றும் நடவு செய்ய அரசு நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றாா்.