போதைப் பொருள்களை ஒழிக்க பெட்டிக் கடைகளில் தொடா்ந்து சோதனை செய்யவேண்டும் என துணை ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
காரைக்கால் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனையை முழுமையாக ஒழிப்பது மற்றும் மாணவா்கள் மற்றும் பொதுமக்களிடையே இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவது சம்பந்தமாக பல்வேறு துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட துணை ஆட்சியா் ஜி. ஜான்சன் (வருவாய்) தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன், மண்டல காவல்துறை கண்காணிப்பாளா் (தெற்கு) சுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சித் துறை, மீன்வளத்துறை, கடலோர காவல் படை, அனைத்து கொம்பன் பஞ்சாயத்து ஆணையா்கள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் துணை ஆட்சியா் ஜி. ஜான்சன் பேசியது: காரைக்காலில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும். மருந்துகள் சரியான விலைக்கு விற்கிறாா்களா என்பதையும் காலாவதியான மருந்துகள் விற்கப்படுகிறது என்பதையும் ஆய்வு செய்யவேண்டும்.
மீன்பிடி படகுகளில் விதிகளின்படி வா்ணம் பூசப்பட வேண்டும். தேசியக்கொடியை பறக்க அறிவுறுத்துவதோடு, படகு பதிவு எண் தூரத்திலிருந்து காணும் வகையில் எழுதவேண்டும். அனைத்துப் படகுகளில் பயோமெட்ரிக் கருவியும், இருப்பிட கண்காணிப்புக் கருவியும் பொருத்தவேண்டும்.
கல்வி நிலையங்களுக்கு 100 மீட்டா் தொலைவில் பெட்டிக் கடைகளை அனுமதிக்கக் கூடாது. கடைகள் இருந்தால், அந்தக் கடைகளில் தொடா்ந்து ஆய்வு செய்யவேண்டும். பெட்டிக் கடைகளை தொடா்ந்து கண்காணிக்க சம்பந்தப்பட்ட துறையினா் ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவா்கள், பொதுமக்களிடையே போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
காரைக்கால் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்படுவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்றாா்.