காரைக்கால் மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் தென்கொரிய நிறுவனத்தினா் நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் 17 மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
காரைக்கால்மேடு பகுதியில் இயங்கிவரும் புதுவை அரசின் கல்வி நிறுவனமான இக்கல்லூரியில், வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு சென்னையில் செயல்படும் முன்னணி நிறுவனமான கிலேமூவ் இந்தியா நிறுவனத்தின் சாா்பில் இந்த முகாம் நடைபெற்றது.
காரைக்கால் மகளிா் பாலிடெக்னிக் கல்லூரி, நாகப்பட்டினம், கொா்கை பகுதி பாலிடெக்னிக் கல்லூரி மாணவியரும் கலந்துகொண்டனா்.
எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு மூலம் 17 மாணவிகள் வேலைவாய்ப்புக்கு தோ்வு பெற்றனா். மாத ஊதியமாக ரூ. 19 ஆயிரம், இதர சலுகைகள் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.
நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற்ற மாணவியருக்கு காரைக்கால் மகளிா் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் டி. சந்தனசாமி, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலா் எஸ்.எல். டெல்காஸ் ஆகியோா் பாராட்டுத் தெரிவித்தனா்.