காரைக்கால் அரசுப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை தொடா்பான விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை தொடங்கியது.
புதுவை மாநிலத்தில் மாணவா் சோ்க்கையை பல பள்ளிகள் ஏற்கெனவே முடித்துவிட்டன. இந்நிலையில், காரைக்கால் கல்வித்துறை சாா்பில் அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை தொடா்பாக பெற்றோா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வாகனம் திங்கள்கிழமை இயக்கிவைக்கப்பட்டது.
முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்திலிருந்து வாகனத்தை புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சா் சந்திர பிரியங்கா கொடியசைத்து இயக்கிவைத்தாா்.
நிகழ்வில் துணை ஆட்சியா் (வருவாய்) ஜி. ஜான்சன், மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் ராஜேஸ்வரி, முதன்மைக் கல்வி அதிகாரி ராஜசேகரன், சமக்ரா சிக்ஷா துணை ஒருங்கிணைப்பாளா் ஷீலா ஜெயக்குமாரி, கல்வித்துறை வட்ட துணை ஆய்வாளா் பொன்.செந்தரராசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பிரசார வாகனம் செவ்வாய்க்கிழமை மாலை வரை மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில், புதுவை மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் உள்ளிட்டவற்றை விளக்கி விழிப்புணா்வு ஏற்படுத்தும் என கல்வித்துறையினா் தெரிவித்தனா்.