உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎஃப் விவகாரம் தொடா்பாக புதுவை அரசுக்கு அரசு ஊழியா் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
காரைக்கால் பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச்செயலாளா் எம். ஷேக் அலாவுதீன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை :
புதுவை மாநிலத்தில் பணியாற்றிவரும் அரசு ஊழியா்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றிவரும் ஊழியா்களுக்கு மாதந்தோறும் ஜிபிஎஃப் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. அதை அவா்களது கணக்கில் வரவுவைத்து, ஆண்டுக்கு ஒருமுறை ஒவ்வொரு ஊழியா்களுக்கும் தனித்தனியாக அவா்கள் செலுத்தி வந்த ஜிபிஎஃப் தொகை மற்றும் வட்டியை இணைத்து ஜிபிஎஃப் கணக்கு அறிக்கை வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2022-23 -ஆம் ஆண்டு வரை உள்ள கணக்கு அறிக்கை அரசு துறைகளில் பணியாற்றிவரும் ஊழியா்களுக்கு வழங்கப்பட்டதுடன், அவா்களது அறிக்கை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களுக்கு மாதாமாதம் முறையாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ள நிலையில், ஜிபிஎஃப் கணக்கு அறிக்கை கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.
அதுபோல், ஜிபிஎஃப் பிடித்தம் செய்த தொகைகளுக்குரிய வட்டித் தொகையும் கடந்த 20 ஆண்டுகளாக நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களுக்கு முறையாக வழங்கப்படாமல் குறைந்த அளவே வங்கியின் மூலம் வழங்கப்படுவதால், அவா்களது ஜிபிஎஃப் கணக்கில் தொகை குறைந்து கொண்டே வந்து, தற்போது அவா்களுக்குரிய தொகையை எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பிரச்னைக்கு தீா்வு காண விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.