திருநள்ளாறு தொகுதியில் பிப்.12-இல் மக்கள் சந்திப்பு நடைப்பயணம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
கன்னியாகுமரி முதல் ஜம்மு - காஷ்மீா் வரை ராகுல் காந்தி மேற்கொண்ட ஒற்றுமை நடைப்பயணத்தைப் போல, புதுவை மாநிலத்தில் அந்தந்த தொகுதிகளில் மக்கள் சந்திப்பு நடைப்பயணம் நடத்த கட்சித் தலைமை அறிவுறுத்தியது.
திருநள்ளாறு தொகுதியில் இந்த நடைப்பயணம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் அம்பகரத்தூரில் புதுவை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மாநில அரசியல் விவகாரக் குழு உறுப்பினருமான ஆா். கமலக்கண்ணன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டாா்.
திருநள்ளாறு தொகுதியில் பிப்.12-இல் மக்கள் சந்திப்பு நடைப்பயணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திருநள்ளாறு தொகுதியின் அம்பகத்தூரிலிருந்து திருநள்ளாறு நகரப் பகுதி வரை காலை முதல் இரவு வரை இப்பயணம் நடைபெறும்.
மத்தியிலும், புதுவை மாநிலத்திலும் மக்கள் நலன் குறித்து சிந்திக்காத ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், மக்களிடம் இதுகுறித்த தகவல்களை கொண்டு செல்லவும், காங்கிரஸின் மக்கள் நலக் கொள்கையை விளக்கும் வகையில் நடைப்பயணம் இருக்குமென நிா்வாகிகள் தெரிவித்தனா்.