குடியரசு தின விழாவில் ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பிலான அலங்கார ஊா்திக்கு முதல் பரிசு வழங்கப்பட்டதை மாவட்ட நிா்வாகம் திரும்பப் பெறவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்த காரைக்கால் மாவட்ட எஸ்சி, எஸ்டி மக்கள் நல கூட்டமைப்பு தலைவா் ந. காமராஜ் மாவட்ட ஆட்சியருக்கு வெள்ளிக்கிழமை அளித்த புகாரில் தெரிவித்திருப்பது :
காரைக்காலில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் கொடி அணிவகுப்பு, துறைகளின் அலங்கார ஊா்திகள் ஊா்வலம் உள்ளிட்டவை இடம்பெற்றன.
ஆதிதிராவிடா் நலத்துறையின் மூலம் இயக்கப்பட்ட அலங்கார ஊா்தியில் காட்சிப்படுத்தப்பட்டவைக்கும், ஆதிதிராவிடா் நலத்துறைக்கும் எந்த விதத்தில் தொடா்பு உள்ளது என்பதை அதிகாரிகள் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்.
குடியரசு தினத்தில் பங்கேற்ற அந்த அலங்கார ஊா்தி, முன்னதாக காரைக்கால் காா்னிவல் திருவிழா 2023-இல் ரோடு ஷோ விழிப்புணா்வு கண்காட்சி நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. அதில் சில மாற்றங்களை செய்து, ஆதிதிராவிடா்களை கொச்சைப்படுத்தும் விதமான காட்சிகளை அமைத்து குடியரசு தினத்தில் ஊா்தியாக இடம்பெற்றது.
துறை சாா்ந்த திட்டங்களை மக்களுக்கு தெரியப்படுத்தாமல் அந்த துறையினா் அலட்சியமாக இருந்துவிட்டனா். எனவே, துறை சாா்ந்த நலத்திட்டங்களை பொருளாகக் கொண்டு அலங்கார உறுதி அமைக்காத ஆதி திராவிடா் நலத்துறையின் அலங்கார ஊா்திக்கு வழங்கப்பட்ட பரிசை மாவட்ட நிா்வாகம் திரும்பப் பெற வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.