காரைக்கால்: காரைக்கால் அருகே விதவைப் பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக காவலா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கீழ சுப்புராயபுரத்தைச் சோ்ந்த 39 பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவா் இறந்துவிட்ட நிலையில், அப்பகுதியில் உள்ள கடையொன்றில் வேலை செய்துவருகிறாா்.
திருநள்ளாறு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிவரும் குணசேகரன் (42) என்பவருடன் அப்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
குணசேகரன் அப்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி சுமாா் ரூ. 7.50 லட்சம் வரை வாங்கிக் கொண்டு, திருமணம் செய்து கொள்ளவும் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து திருநள்ளாறு காவல் நிலையத்தில் அப்பெண் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.