காரைக்கால்: புதுவை மாநில மின்துறையில் மின் கணக்கீட்டில் பிரீபெய்டு மீட்டா் பொருத்தும் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலா் மதியழகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை :
புதுவை மாநிலத்தில் மின்துறையை தனியாா் மயமாக்கும் திட்டம் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மின் கணக்கீடு செய்யும் மீட்டரை பிரீபெய்டு மீட்டராக மாற்றும் திட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுவா் என்பதால், இத்திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
பருவம் தவறி மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும். ஆதிதிராவிடா் நலனுக்காக ஒதுக்கீடு செய்யும் நிதியை அவா்கள் நலனுக்கு மட்டுமே செலவிடவேண்டும். பிற துறைகளுக்கு அந்த நிதியை மாற்றம் செய்யும் போக்கை அரசு கைவிடவேண்டும்.
காரைக்காலில் வீட்டு வரி, குப்பை வரி செலுத்தும் திட்டத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.