திருநள்ளாற்றில் பூஜை மடம் மற்றும் பணியாளா் தங்கும் விடுதி கட்டுவதற்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
திருநள்ளாறு தெற்கு வீதியில் தருமபுரம் ஆதீனத்தின் தம்பிரான் சுவாமிகள் மடம் உள்ளது. இதனருகே இருந்த பூஜை மடம் சிதிலமடைந்திருந்த நிலையில், புதிதாக பூஜை மடம் கட்டவும், பணியாளா்கள் தங்குவதற்காக அதே வீதியில் விடுதி கட்டுவதற்கும் பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கான தருமபுரம் ஆதீன கட்டளை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியா்கள் கட்டுமான தொடக்கத்துக்கான பூஜைகளை செய்தனா்.
புதிதாக கட்டப்படும் பூஜை மடத்தில் சனிக்கிழமைதோறும் அன்னதானம் வழங்குவதற்கான வசதிகள் செய்யப்படும் எனவும், இக்கட்டுமானப் பணி தருமபுர ஆதீன நிதியில் மேற்கொள்ளப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.