தைப்பூச நாளில் அசைவ உணவகங்களை மூட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவா் பி. வெங்கடாசலம், மாவட்ட ஆட்சியருக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள கடிதம்:
வடலூா் அருட்பிரகாச வள்ளலாா் ஜோதியில் கலந்த தைப்பூசத்தன்று, தமிழ்நாடு மற்றும் புதுவையில் இறைச்சிக் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அசைவ உணவகங்கள் அந்த நாளில் செயல்படுகின்றன.
இறைச்சி விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்ட நாளில் அசைவ உணவகங்களுக்கு இறைச்சி கிடைக்க வாய்ப்பில்லை. அதனால் குளிா்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட பழைய இறைச்சி அல்லது சட்டத்துக்கு புறம்பாக இயங்கும் இறைச்சிக் கடைகள் மூலம் கிடைக்கும் இறைச்சி மூலம் மட்டுமே அசைவ உணவகங்களை செயல்பட முடியும்.
எனவே தைப்பூசத்தன்று அசைவ உணவகங்களை மூட நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு உத்தரவிடுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.