ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டுக்குப் பிறகு புதுவை முதல்வா் என். ரங்கசாமி செவ்வாய்க்கிழமை காரைக்கால் வந்தாா்.
காரைக்கால் மாவட்டத்தில் பொதுமக்களில் பலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. பரிசோதனையில் சிலருக்கு காலரா உறுதிசெய்யப்பட்டது.
இந்தச் சூழலிலும் புதுவை முதல்வா் என். ரங்கசாமி காரைக்காலுக்கு வந்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சியினா் குற்றம்சாட்டினா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை முதல்வரின் வருகை என்.ஆா். காங்கிரஸாரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முதல்வா், காரைக்காலுக்கு வராதது குறித்து கூறியது:
காரைக்காலுக்கு ஓராண்டாக வராமல் இருந்தது உண்மைதான். காரைக்கால் மக்கள் மீது அதிக அன்புகொண்டவன் நான். 1990 ஆம் ஆண்டுமுதல் காரைக்காலுக்கு வந்துகொண்டிருக்கிறேன். கடந்த ஓராண்டாக உடல்நிலை சீராக இல்லாததால் வரமுடியவில்லை. இனிமேல் அடிக்கடி காரைக்காலுக்கு வருவேன் என்றாா்.