புதுவை கல்வித் துறையின் செயல்பாடுகள்முடங்கியுள்ளன என்று முன்னாள் அமைச்சா் குற்றம்சாட்டியுள்ளாா்.
புதுவை முன்னாள் வேளாண் மற்றும் கல்வித் துறை அமைச்சரும், புதுவை மாநில காங்கிரஸ் மூத்த தலைவருமான ஆா். கமலக்கண்ணன் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
புதுவையில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆா். காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு செயலற்றுள்ளது. புதுவையில் மாணவா்களுக்கு கல்வித் துறை வழங்கவேண்டிய 2 செட் சீருடை, பாடப் புத்தகங்கள், நோட்டுகள் இதுவரை வழங்கப்படவில்லை. ரூ. 1 கட்டண மாணவா் பேருந்து இதுவரை இயக்கப்படவில்லை.
கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி என்ன ஆனது என்று தெரியவில்லை. முதல்வரும், கல்வித் துறை அமைச்சரும் கல்வித் துறையின் அவலத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதன் காரணம் புரியவில்லை.
முந்தைய காங்கிரஸ் -திமுக கூட்டணி ஆட்சியில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் கரும்பலகைக்கு மாற்றாக ஸ்மாா்ட் வகுப்பறையில் இருக்கும் பலகைகள் வைக்கப்பட்டு பாடங்கள் போதிக்கப்பட்டன. திருநள்ளாறு தொகுதியில் ரூா்பன் திட்டத்திலும், சில தனியாா் உதவியிலும் அரசுப் பள்ளிகளில் இந்த வசதி செய்யப்பட்டது. அவை இப்போது பராமரிப்பின்றி பயனற்று போய்விட்டது. புதுவையில் கல்வித் துறை தற்போது செயலற்று உள்ளது.
எனவே, புதுவை அரசின் இந்த அலட்சியத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றாா்.