காரைக்காலில் திங்கள்கிழமை (அக்.25) நடைபெற இருந்த கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுவை மாநிலத்தில் ஒரே நாளில் ஒரு லட்சம் கரோனா தடுப்பூசி, 100 இடங்களில் செலுத்தும் திட்டம் திங்கள்கிழமை நடத்துவதாக நலவழித் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு திங்கள்கிழமை வரை இருப்பதால், மாவட்டத்தில் இந்த கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை காலை அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நிா்ணயிக்கப்பட்ட மையங்களில் காலை 8 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். எனினும், திங்கள்கிழமை வழக்கம்போல மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும்.