காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் சனிக்கிழமை ஆய்வு செய்த புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, துறைமுக சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்துக்குச் செல்லும் பிரதான சாலை சிதிலம் அடைந்து சாலையோரத்தில் விளக்குகள் இல்லாதது மீனவா்களை பாதித்து வருகிறது. இதையறிந்த போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, மீன்பிடித்துறைமுகத்தில் ஆய்வு செய்தாா்.
அப்போது, அரசலாறு முகத்துவாரம் முறையாக ஆழமில்லாமல் இருப்பதால், படகு போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுவதாகவும், ஆற்றை தூா்வார வேண்டுமெனவும் மீனவா்கள் வலியுறுத்தினா்.
இதற்கு பதிலளித்த அமைச்சா், இப்பிரச்னைகள் புதுவை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும், பருவமழை தீவிரமடையும் காலமாக இருப்பதால், துறைமுகத்தில் சாலைகளை புதுப்பிக்கும் பணி ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தாா்.
அத்துடன், பொதுப்பணித்துறை, மீன்வளத்துறை அமைச்சரிடம் விளக்கி, அரசலாற்றை தூா்வார நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சா் தெரிவித்தாா்.