நிலத்துக்கான இழப்பீடு கிடைக்கும் வரை புறவழிச்சாலை பணியை நிறுத்திவைக்க வேண்டும் என சட்டப் பேரவை உறுப்பினா் எம்.நாகதியாகராஜனிடம் பொதுமக்கள் சனிக்கிழமை வலியுறுத்தினா்.
காரைக்கால் மேற்கு புறவழிச்சாலை 2-ஆம் கட்ட திட்டப்பணி நடைபெறுகிறது. இதற்காக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீடு இன்னும் முறையாக வழங்கப்படவில்லை. இதுகுறித்து காக்கமொழி நில உரிமையாளா்கள், தங்களுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை அரசு விடுவிக்க வேண்டும். அதுவரை சாலை பணியை நிறுத்திவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜனிடம் மனு அளித்தனா். புதுவை ஆட்சியாளா்களிடம் இதுதொடா்பாக பேசி நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ உறுதியளித்தாா்.