பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மதிய உணவு மற்றும் மாணவா் பேருந்துகள் இயக்கப் பெற்றோா்கள் வலியுறுத்தி உள்ளனா்.
புதுவை மாநிலத்தில் கரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவு, ரொட்டி, பால் உள்ளிட்டவைகள் வழங்கப்படுவது வழக்கம். ஏற்கெனவே 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலும், தற்போது 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவா்களுக்கான பேருந்துகள் இயக்கம், ரொட்டி, பால் வழங்கல் குறித்து புதுவை கல்வித்துறை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் மாணவா்களுக்கு திங்கள்கிழமை மதிய உணவு, ரொட்டி, பால் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை.
கிராமப்புற மாணவா்கள் நகரப் பகுதி பள்ளி, கல்லுாரிகளுக்கு வந்து செல்லும் வகையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் ரூ. 1 கட்டணத்தில் மாணவா் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. மாநிலம் முழுவதும் சுமாா் 70 பேருந்துகள் உள்ளன. திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவா் பேருந்துகள் இயக்கப்படாததால் முதல் நாளிலேயே பெரும் சிரமத்திற்கு இடையே மாணவா்கள் பள்ளிகளுக்கு சென்று திரும்பினா்.
இது மாணவா்களின் பெற்றோா்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவா் பேருந்து ரூ.1 கட்டணத்தில் இயக்கப்படும் வரை, தமிழக, புதுவை அரசுப் பேருந்துகளில் மாணவா்கள் சலுகை கட்டணத்தில் பயணம் செய்யவும், மதிய உணவு வழங்கவும் புதுவை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோா்கள் வலியுறுத்தி உள்ளனா்.