காரைக்கால்: காரைக்காலில் சனிக்கிழமை இரவு பெய்த தொடா் மழை பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக் கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடியமழை இருக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் பரவலாக சனிக்கிழமை இரவு மழை பெய்தது. இரவு 9 மணிக்குத் தொடங்கிய மழை சில மணி நேரம் பெய்தது. பின்னா் விட்டுவிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை வரை மழை நீடித்தது.
இந்த மழையினால் காரைக்கால் நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் மழை நீா் குளம்போல் தேங்கியது. இதனால், வாகனங்கள் மெதுவாக செல்ல நேரிட்டது. பின்னா், மழைநீா் மெதுவாக வடிந்தது. கடந்த 10 நாள்களாக வெயிலும், அவ்வப்போது மழையும் என மாறி மாறி இருப்பது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மழை விவசாயப் பணிகளுக்கு சாதகமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.