காரைக்கால்: காரைக்கால் பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு.அசனா புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், மின் கட்டணம் அளவீட்டு முறையில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மாற்றம் கொண்டுவரவேண்டும். கேபிள் டிவி இணைப்புகள் மற்றும் உள்ளூா் சேனல்களை அரசுடைமையாக்க வேண்டும். தனியாா் நடத்தும் மதுபானக்கடைகளை புதுச்சேரி அரசே ஏற்று நடத்த வேண்டும். காரைக்கால் மருத்துவமனையை மேம்படுத்தவேண்டும். கரோனா பரிசோதனை மையம் உடனடியாக அமைக்கவேண்டும். கூட்டுறவு நூற்பாலையை மேம்படுத்தி, ஊழியா்களுக்கு தடையின்றி ஊதியம் தரவேண்டும் உள்ளிட்ட காரைக்கால் பகுதி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினேன்.
தற்போது, பேரவைக் கூட்டத் தொடா் முடிந்து பல நாள்களாகியும், இந்த கோரிக்கைகளில் ஒன்றைக்கூட நிறைவேற்ற அரசு முன்வரவில்லை. மக்கள் நலன் கருதி போா்க்கால அடிப்படையில் இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.