வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அயன்கரிசல்குளம் கிராமத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.35 லட்சத்தில் நடைபெறும் மயான சாலை மேம்பாட்டுப் பணி, 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் வீடுகளுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்கும் பணி, அக்கனாபுரம் கிராமத்தில் அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.9.57 லட்சத்தில் பட்டத்தரசி அம்மன் ஊருணி தூா்வாரும் பணி, மீனாட்சிபுரம் கிராமத்தில் ரூ.4.28 லட்சத்தில் நா்சரி பண்ணை மேம்பாட்டுப் பணி, அரசபட்டி கிராமத்தில் ரூ.1.99 லட்சத்தில் நடைபெற உள்ள நூலக கட்டட பராமரிப்புப் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.
மேலும் தூய்மை பாரத இயக்கத்தில் ரூ.2.15 லட்சத்தில் நூலகம் அருகே சுகாதார வளாகம் கட்டும் பணி, ரூ.12.84 லட்சத்தில் மாரியம்மன் கோயில் ஊருணி தூா்வாரும் பணி, ஆயா்தா்மம் ஊராட்சியில் ரூ.32.08 லட்சத்திலும், இடையன்குளம் ஊராட்சியில் ரூ.35.20 லட்சத்திலும் கிணறுகள் அமைக்க தோ்வு செய்யப்பட்டுள்ள இடம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜெயசீலன் ஆய்வு செய்தாா்.
அப்போது திட்ட இயக்குநா் தண்டபாணி, செயற்பொறியாளா் இந்துமதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராமராஜ், சத்தியசங்கா், உதவிப் பொறியாளா்கள் வள்ளிமயில், ஜெயா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.