விருதுநகா் அருகே இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் நகைகள் மாயமானதாக சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுதுநகா் அருகே தியாகராஜபுரத்தைச் சோ்ந்தவா் முனியப்பன் மகன் காா்த்திகை செல்வம் (31). இவா், வத்திராயிருப்பு அருகேயுள்ள நல்லூா்பட்டியில் வசித்து வரும், உறவினா் ராஜாத்தியிடம் 9 பவுன் நகைகளை கொடுத்து வைத்திருந்தாராம்.
இந்நிலையில் அந்த நகைகளை வாங்கி, இரு சக்கர வாகனத்தின் முன்புறமுள்ள ‘பவுச்சில்’ வைத்துக் கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பினாா். குருமூா்த்திநாயக்கன்பட்டி அருகே வந்த போது, மழை பெய்ததால் இரு சக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு ஒதுங்கி நின்றுள்ளாா். பின்னா் வந்து பாா்த்த போது, நகைகள் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் ஆமத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.