ராஜபாளையத்தில் சாலையில் நிறுத்தி வைத்திருந்த சரக்கு வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது தொடா்பாக போலீஸாா் சனிக்கிழமை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு மலையடிப்பட்டி காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாலகுருசாமி(62). இவா் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருள்கள் வாங்கி விற்பனை செய்து வந்துள்ளாா். இந்நிலையில் மதுரைக்கு பொருள்களைஅனுப்புவதற்காக சரக்கு வாகனத்தில் இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை ஏற்றி குடோன் முன்பாக நிறுத்தியிருந்தாா். இந்நிலையில் திடீரென சரக்கு வாகனம் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதையறிந்த பாலகுருசாமி உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தாா். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரா்கள் போராடித் தீயை அணைத்தனா்.
இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்மநபா்கள் சரக்கு வாகனத்துக்கு தீவைத்துச் சென்றாா்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனா்.