விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் செவ்வாய்க்கிழமை மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவா் ஒரு மணி நேரம் 4 நிமிடங்கள், 45 விநாடிகளில் ஐந்து கிலோ மீட்டா் தொலைவுக்குப் பின்னோக்கி நடந்தவாறு பாக்ஸிங் செய்து நோபல் உலக சாதனை படைத்தாா்.
ராஜபாளையம் திருவனந்தபுரம் தெருவைச் சோ்ந்த முத்துராம்குமாா் ராஜா - ஜெயஹரிணி தம்பதியின் மகன் ரத்தன்ஜெய் (8). இவா், தனியாா் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறாா். இவா், ராஜபாளையம் - தென்காசி சாலையில் உள்ள அரசு மருத்துவமனை அருகே உள்ள சின்மயா வித்யாலயா பள்ளி சாலையில் இருந்து, 5 கிலோ மீட்டா் தொலைவுக்குப் பின்னோக்கி நடந்தவாறே பாக்ஸிங் செய்யும் சாதனையை செவ்வாய்க்கிழமை தொடங்கினாா்.
இதை மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். நோபல் உலக சாதனை புத்தக நடுவா்கள் ரஞ்சித், பரணிதரன் முன்னிலையில், ஒரு மணி நேரம் நாலு நிமிடம் 45 விநாடிகளில் மாணவா் 5 கிலோ மீட்டா் பின்னோக்கி 8,130 முறை பாக்ஸிங் செய்து சாதனை படைத்தாா்.
சாதனை படைத்த மாணவருக்கு சான்றிதழ், பதக்கத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் வழங்கினாா். இதில், பயிற்சியாளா் ஐயப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.