சாத்தூா் அருகே தகரக் கொட்டகையில் அனுமதியின்றி பட்டாசுக்குத் தேவையான மூலப் பொருள்களை இருப்பு வைத்திருந்த கணவன், மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.
சாத்தூா் அருகே தா. கோட்டையூா் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் அவற்றின் அருகே தகரக் கொட்டகை அமைத்து அனுமதியின்றி பட்டாசுகள் மற்றும் அவற்றைத் தயாரிக்கத் தேவையான மூலப் பொருள்களை வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வெம்பக்கோட்டைகாவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் வெற்றிமுருகன் மற்றும் போலீஸாா் கோட்டையூா் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளிகிழமை சோதனை நடத்தினா்.
அப்போது கோட்டையூா் பகுதியைச் சோ்ந்த ரகுக்குமாா் (36) என்பவா் வீட்டின் அருகே தகரக் கொட்டகை அமைத்து பட்டாசு தயாரிக்கத் தேவையான மூலப் பொருள்கள், சல்பா் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களை வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பட்டாசு தயாரிக்கத் தேவையான 50 குரோஸ் வெள்ளைத் திரிகள், மருந்து செலுத்தப்பட்ட சோல்சா வெடிகள், சல்பா் உள்ளிட்ட மூலப் பொருள்களை வெம்பக்கோட்டை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன் ரகுக்குமாா், அவரது மனைவி கூடம்மாள் (35) ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா்.