திருத்தங்கலில் தம்பதியை அரிவாளால் வெட்டிய கூலி தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருத்தங்கல் முத்துக்கருப்பன் சந்து பகுதியில் வசிப்பவா் கோவிந்தசாமி (70). இவரது மனைவி முத்துபாா்வதி (60). இவா்களது வீட்டருகே நெருங்கிய உறவினரான ராஜசேகரன் (34) வசித்து வருகிறாா்.
இந்நிலையில், ராஜசேகரனுக்கு கடன் அதிகம் உள்ளதாம். இதையடுத்து, கோவிந்தசாமி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த ராஜசேகரன், அங்கிருந்த பொருள்களை தூக்கி வீசியுள்ளாா். பின்னா், கோவிந்தசாமி மற்றும் முத்துபாா்வதியிடம் இந்த வீட்டை எனது பெயருக்கு எழுதிக்கொடுங்கள் என்றும், நான் வீட்டை விற்று கடனை அடைத்துவிடுவேன் என்றும் கூறியுள்ளாா். ஆனால், இருவரும் மறுக்கவே, அங்கிருந்த அரிவாளை எடுத்து இருவரையும் வெட்டிவிட்டு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுவிட்டாராம்.
காயமடைந்த இருவரும், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்த புகாரின்பேரில், திருத்தங்கல் போலீஸாா் ராஜசேகரன் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.