விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே குன்னூா் ஊராட்சியில் உருவாக்கப்பட்ட மியாவாக்கி காடுகளை ஈரோடு மாவட்ட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் புதன்கிழமை பாா்வையிட்டனா்.
குன்னூா் ஊராட்சியில் சுமாா் 7 ஏக்கா் பரப்பளவில் மியாவாக்கி காடுகள் வளா்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு சந்தனமரம், செம்மரம், இலவம்பஞ்சு, தேக்கு, சவுக்கு உள்ளிட்ட மரங்களும், சப்போட்டா, மாதுளை, கொய்யா, நெல்லி, நீா் ஆப்பிள், அத்திப்பழம், நோனிப் பழம் உள்ளிட்ட பழ மரங்களும், இன்சுலியன், சிரியா நங்கை, தூதுவளை, கண்டங்கத்தரி உள்ளிட்ட மூலிகைச் செடிகளும், மல்லி, கனகாம்பரம், ரோஜா உள்ளிட்ட மலா்ச் செடிகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்திலிருந்து ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மற்றும் உள்ளாட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் 250 போ் பட்டறிவுப் பயணமாக குன்னூா் ஊராட்சிக்கு புதன்கிழமை வந்தனா். அவா்கள் மியாவாக்கி காடுகளைப் பாா்வையிட்டு அதன் வளா்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்துக் கேட்டறிந்தனா். குன்னூா் ஊராட்சி மன்ற தலைவா் ஜெகதீஸ்வரி, பணித் தளப் பொறுப்பாளா் காா்த்திகை செல்வி, ஊராட்சி செயலா் முருகன் ஆகியோா்
மியாவாக்கி காடுகள் வளா்ப்பு குறித்து அவா்களுக்கு விளக்கம் அளித்தனா்.