விருதுநகா் மாவட்டத்தில் கரோனா பரவல் காலத்தில் அரசு மருத்துவமனைகளில் தற்காலிக பணியாளா்களாக பணியமா்த்தப்பட்ட தங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என பல்நோக்கு பணியாளா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது: கரோனா தொற்று பரவல் காலத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய 154 போ் பல்நோக்கு பணியாளா்களாக தோ்வு செய்யப்பட்டோம். கடந்த மே மாதம் முதல் மருத்துவமனைகளை சுத்தம் செய்தல், வெளிநோயாளிகளுக்கான சீட்டுப் பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறோம். ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், நவ. 30 ஆம் தேதியுடன் தற்காலிக பணி நிறைவடைகிறது. எனவே, எங்களது பணிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.