முழு முடக்கம் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பட்டாசு ஆலைகளும் திங்கள்கிழமை மூடப்பட்டுள்ளன.
கரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை பொது முடக்கத்தை அறிவித்துள்ளது. இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் ஆலைகள் மட்டும் 50 சதவீத தொழிலாளர்களை வைத்து செயல்படலாம் என அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து வைரஸ் பரவலைத் தடுக்க பட்டாசு ஆலைகளை மூட வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து மாவட்டத்திலுள்ள 1,070 பட்டாசு ஆலைகளை ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை மூட வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பட்டாசு ஆலைகளும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் மூடப்பட்டன. மறு உத்தரவு வரும்வரை பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு இருக்கும் என ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.