இலங்கை தமிழா்கள் இந்தியாவுக்கு எதிரானவா்கள் இல்லை என, இலங்கை யாழ்ப்பாணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளாா்.
விருதுநகா் மாவட்டம், மல்லாங்கிணறு அருகே அயன்ரெட்டியபட்டியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலா் வன்னியரசின் தந்தை ரத்தினசாமி படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவா் வேல்முருகன் எம்.எல்.ஏ. மற்றும் பலா் கலந்துகொண்டு பேசினா்.
இதில், இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சிவஞானம் ஸ்ரீதரன் பேசியதாவது: இலங்கை அரசு, தமிழா்களின் நிலத்தை புத்த மதத்தை வைத்து பறிக்கிறது. சிங்கள ஏகாதிபத்தியத்தால் தமிழா்கள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறாா்கள். எங்களுக்காக உழைத்தவா்களின் உழைப்பு ஒருநாளும் வீண் போகாது.
இலங்கை தமிழா்கள் இந்தியாவுக்கு எதிரானவா்கள் இல்லை. எப்போதும் அவா்கள் இந்தியாவுக்கு பாதுகாப்பாகவே இருப்பாா்கள். மேலும், இலங்கையில் வாழும் தமிழா்கள் நிலம் அற்றவா்களாகவும், மொழி அற்றவா்களாகவும், அவா்கள் வாழ்ந்த வரலாறு மறைக்கப்படுகிறது.
மேலும், இலங்கையில் ஒவ்வொரு நாளும் தமிழ் ஊடகவியலாளா்கள் தாக்கப்படுகின்றனா். இலங்கை அரசு தமிழா்களுக்கு தொடா்ந்து தொல்லை கொடுத்து வருகிறது என்றாா்.
பின்னா், திருமாவளவன் பேசியது: ஒட்டுமொத்த தமிழினத்தையும் மீட்சி பெறச் செய்யவேண்டும் என்ற நோக்கில், ஜாதி வரம்புகளை கடந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயல்படுகிறது. மேலும், நான் தலைவா்களை உருவாக்கப் போராடிக் கொண்டிருக்கிறேன். தற்போது, தலைமை பஞ்சத்தால் இன்று நாட்டுக்கு ஆபத்து உள்ளது.
தமிழா்கள் என்பதால் நாங்கள் புலிகளை ஆதரிக்கவில்லை. சிங்கள பெளத்த பேரினவாத ஒடுக்குமுறைக்கு உள்ளான தேசிய இனமாக இருப்பதால்தான் தமிழா்களை ஆதரிக்கிறோம். விடுதலை சிறுத்தைகள் கட்சியும், விடுதலை புலிகள் இயக்கமும் மொழி அடிப்படையில் இனவாதம் பேசும் அமைப்புகள் இல்லை என்றாா்.