விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்ட திமுக இளைஞரணி பொறுப்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ரமேஷ் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. கே.எம்.விஜயக்குமார், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சிவப்பிரகாசம், நகரச் செயலாளர் ஏ.கே.மணி, மா. கம்யூ. நகர பொறுப்பாளர் காத்த முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது, விவசாயிகளின் வாழ்வைப் பாதிக்கக்கூடிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும், 100 நாட்கள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சுமார் 200 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் ம.அய்யனார், சிறுபாண்மையினர் பிரிவு மாவட்டத் தலைவர் என்.சிக்கந்தர், ம.திமுக நகரச் செயலாளர் மணிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலரும், அக்கட்சிகளின் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.