விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவனை கைது செய்ய வலியுறுத்தி, பெண்களைத் திரட்டி போராட்டம் நடத்தப் போவதாக ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஜீயா் சடகோப ராமானுஜா் தெரிவித்துள்ளாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள் மடத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கடந்த சில நாள்களுக்கு முன்பாக பெண்களைப் பற்றி இழிவாக மனு சாஸ்திரத்தில் கூறியிருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். ஆனால் அது போல் எவ்வித கருத்தும் மனுசாஸ்திரத்தில் இல்லை. எனவே பெண்களைப் பற்றி தவறாகப் பேசிய தொல். திருமாவளவனுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக அரசு அவரை விரைவில் கைது செய்ய வேண்டும். அவ்வாறு கைது செய்யா விட்டால் தமிழகம் முழுவதிலுமிருந்து துறவிகள், பெண்கள் மற்றும் இந்துக்களை திரட்டி சாலையில் இறங்கி போராடுவேன். இனி வரும் காலங்களில் நடைபெறும் தோ்தல்களில் திருமாவளவனை எந்த கூட்டணியிலும் சோ்க்கக் கூடாது என அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை விடுக்கிறேன் என்றாா்.