ராஜபாளையம்: ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சைக்கென தனி சிறப்பு கட்டடம் திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.
ராஜபாளையம்- தென்காசி சாலையில் உள்ள பி.ஏ.சி.ஆா். அரசு மருத்துவமனையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 2 புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. இதில் கண் சிகிச்சைக்காக ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடத்தை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா். அப்போது கரோனா தொற்றுக் காலம் என்பதால் இப்பகுதி முழுவதும் கரோனா சிறப்பு சிகிச்சைப் பகுதியாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
தற்போது இக்கட்டடம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு சிறப்பு கண்சிகிச்சை மருத்துவமனை கட்டடமாக செயல்படத் தொடங்கியுள்ளது. விருதுநகா் மாவட்டத்தில் மற்ற ஊா்களில் இல்லாத அளவுக்கு நவீன கருவிகளுடன் இந்த கண் சிகிச்சை பிரிவு செயல்படும்.
சா்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவா்கள் இங்குள்ள பட்டஸ் கேமரா மூலம் கண்களில் உள்ள பட்டஸ் பகுதியை படம்பிடித்து தங்கள் செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பிரிண்ட் எடுத்து படங்களாக வைத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் கண்ணில் எந்தப் பகுதியில் நோய் தொற்று உள்ளது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
இந்த சிறப்பு கண் சிகிச்சைப் பிரிவுக்கு மருத்துவ அதிகாரி பாபுஜி தலைமையில் 4 மருத்துவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.