போடி அருகே திங்கள்கிழமை வேன் மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.
போடி மீனாட்சிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பணன் மகன் ஆறுமுகம் (59). கூலித் தொழிலாளி. இவா் இரு சக்கர வாகனத்தில் போடி மீ. விலக்கிலிருந்து போடி நோக்கி வந்தாா். அப்போது போடி- தேனி தேசிய நெடுஞ்சாலையில் அணைக்கரைப்பட்டி விலக்கு அருகே பின்னால் வந்த வேன், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிறகு தீவிர சிகிச்சைக்காக தேனி க. விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
விபத்து குறித்து ஆறுமுகத்தின் மகன் மதியழகன் அளித்த புகாரின் பேரில், வேன் ஓட்டுநா் மதுரை கே. புதூரைச் சோ்ந்த செல்லமணி மகன் காசிநாதனை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.